Breaking News
புயல் சேத பகுதிகளை பார்வையிட சென்றபோது கதறியழுத பெண்ணின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறிய கவர்னர்

திருவாரூர் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட சென்ற கவர்னரிடம் பெண்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காதது குறித்து கதறி அழுதனர்.
அப்போது கதறியழுத ஒரு பெண்ணின் கண்ணீரை, கவர்னர் துடைத்து ஆறுதல் கூறினார். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழ செய்தது.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். திருவாரூர் பயணியர் மாளிகையில் இருந்து புறப்பட்டு மன்னார்குடி வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து காசாங்குளம் என்ற இடத்தில் சேதம் அடைந்து கிடந்த உயர்கோபுர மின்கம்பத்தை சரிசெய்யும் பணி நடந்து கொண்டு இருப்பதை பார்வையிட்டார்.

பின்னர் சேரி என்ற இடத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கவர்னர் பார்வையிட்டார். அப்போது தமிழ்ச்செல்வி என்ற பெண், புயலால் நாங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்து விட்டோம். எங்களது வாழ்வாதாரமே நாசமாக போய் விட்டது என்று கூறினார். தொடர்ந்து கோட்டூர் சன்னதி தெருவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அருள்ஜோதி என்ற பெண், நாங்கள் அனைவரும் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி தவித்து வருகிறோம் என்று கண்ணீர் விட்டு கதறினார்.

அந்த பெண்ணின் கதறலை கனிவுடன் கேட்ட கவர்னர், அந்த பெண்ணின் கண்களில் வழிந்த கண்ணீரை தனது கைகளால் துடைத்து ஆறுதல் கூறினார்.

கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்?

பின்னர் அங்கிருந்தவர்களிடம், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காகவும், உங்களை சந்திப்பதற்காகவும் நான் வந்துள்ளேன். உங்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குடிசைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள உங்களுக்கு குடிசைகள் சேதம் அடைந்ததற்கு ரூ.10 ஆயிரமும், முகாம்களில் தங்கியிருப்பதற்கு ரூ.5 ஆயிரமும், பாத்திரங்கள் வாங்குவதற்கு ரூ.3,500-ம் என ரூ.18,500 உடனடியாக வழங்கப்படும் என்று கூறினார்.

அப்போது அங்கிருந்த பெண்கள் பலர், இந்த பகுதிகளில் நிவாரண பணிகளே நடைபெறவில்லை. அதிகாரிகள் வந்து சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிடவில்லை. சேதம் அடைந்த குடிசை வீடுகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை என தெரிவித்தனர். அதனை கேட்ட கவர்னர், அருகில் இருந்த கலெக்டரிடம், புயல் பாதித்து ஒரு வாரம் ஆகியும் ஏன் இன்னும் கணக்கெடுப்பு பணி நடத்தவில்லை என்று கேட்டார். அதற்கு கலெக்டர், சேதம் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருவதாக தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்தவர்களிடம் பேசிய கவர்னர், இன்னும் இரண்டு நாட்களில் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். ஒரு வாரத்தில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து தாதன்திருவாசல் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களை பார்வையிட்டார்.

அதன் பின்னர் திருப்பத்தூரில் சேதம் அடைந்த குடிசைகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டார். விளக்குடி அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ள முகாமிற்கு சென்ற கவர்னர், அங்கிருந்தவர்களை சந்தித்து பேசினார். அப்போது அங்கிருந்தவர்கள் பாதிக்கப்பட்ட தங்களுக்கு இதுவரை எந்த உதவியுமே கிடைக்கவில்லை என்று கூறி கவர்னருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து குமாரமங்கலம், பள்ளங்கோயில் ஆகிய இடங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கவர்னர், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மாலையில் தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு அங்கிருந்து மன்னார்குடி, மதுக்கூர் வழியாக காரில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வந்த அவர், புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது பட்டுக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் நிவாரண பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியை ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை அந்தோணியார் சர்ச் பள்ளி, நகராட்சி பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த பொதுமக்களை சந்தித்து கவர்னர் ஆறுதல் கூறினார்.

இதையடுத்து ஆலடிக்குமுளையில் குடிநீர் தொட்டியில் ஜெனரேட்டர் உதவியுடன் நீரேற்றும் பணியை பார்வையிட்டார். அங்கிருந்து காரில் புறப்பட்டு பாப்பாநாடு அருகே உள்ள ஆதிடநல்லவிஜயபுரத்துக்கு சென்று ரெங்கசாமி மகன் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் புயலால் சாய்ந்து விழுந்த தென்னை மரங்களை பார்வையிட்டு அவருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் கவர்னரிடம்,

தென்னை விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் மத்திய அரசு ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கவர்னரின் கால்களில் விழுந்து கதறினர். அவர்களை சமாதானம் செய்த கவர்னர், காலில் விழக்கூடாது என அறிவுறுத்தினார். மேலும், உங்களுக்கு துணையாக இருப்போம். தைரியமாக இருங்கள். எல்லா தேவைகளும் செய்து கொடுப்போம் என கூறினார்.

இதைத்தொடர்ந்து பாளம்புத்தூரில் புயலால் சேதமடைந்து பின்னர் சீரமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்து விட்டு கவர்னர் காரில் தஞ்சை வழியாக திருச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

கவர்னருடன் அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், சேகர் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறிய கோரிக்கைகளை கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால், மொழி பெயர்த்து கவர்னரிடம் கூறினார். அதேபோல கவர்னர் கூறிய ஆறுதல் வார்த்தைகளையும் கூடுதல் தலைமை செயலாளர், பாதிக்கப்பட்டவர்களிடம் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.