Breaking News
மனைவி நடத்தையில் சந்தேகத்தால் விபரீத முடிவு மின்கோபுரத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா, ஏந்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32), சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த வாரம் விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை. இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு கிரிஜா(8),ஆர்யா(2) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மனைவி கீதாவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த ரமேஷ் நேற்று காலை ஆரணி அருகே உள்ள நெல்வாய்பாளையம் கிராமத்தில் நிலத்தில் அமைக்கப்பட்டு வருகிற உயர் மின்கோபுரத்துக்கு வந்தார். பின்னர் அவர் சுமார் 200 அடி உயரமுள்ள அந்த மின்கோபுரத்தில் ஏறி, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தான் வைத்திருந்த செல்போன் மூலம் உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தகவல் அளித்துவிட்டு மின்கோபுரத்தின் மேல் ஏறினார்.

இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. மேலும் ரமேசின் மனைவி கீதா மற்றும் குழந்தைகள், உறவினர்கள் அங்கு வந்து கோபுரத்தின் மேலே இருந்த ரமேசை கீழே இறங்கி வருமாறு கூறி, கதறி அழுதனர்.

தீயணைப்பு வீரர்கள் உயர் மின்கோபுரத்தில் ஏறி பேச்சுவார்த்தைக்கும் முற்பட்டனர். மேலும் போலீசாரும், வருவாய்த்துறையினரும் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மூலமாகவும், போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி மூலமாகவும் கோபுரத்தில் நின்றிருந்த ரமேசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் மேலே இருந்து ரமேஷ் திடீரென கீழே குதித்தார். அப்போது அவரை மீட்பதற்காக கீழே வலை விரித்திருந்தனர். ஆனால் அவர் கீழே விழும்போது இடையில் அவருடைய சட்டை மின்கோபுரத்தின் ஒரு கம்பியில் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் அந்தரத்தில் தவித்தார். சிறிது நேரத்தில் பாரம் தாங்காமல் சட்டை கிழிந்து தலைகீழாக அவர் விழுந்ததில், தலை மின்கோபுர கம்பியில் அடிபட்டு மூளை சிதறி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து கீழே நின்ற பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து களம்பூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.