Breaking News
“ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை

மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மராட்டிய மாநிலத்தின் சங்லி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு 370 பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியும், சரத் பவாரும் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி சிறப்பான பணியை செய்துள்ளதாக பாராட்டிய அமித்ஷா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த முடிவை காரணமின்றி எதிர்த்து வருகின்றன” என்று கூறினார்.

மேலும் மோடியின் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நமது ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பிறகு இந்தியாவின் மீதான உலகத்தின் பார்வை மாறியுள்ளது. நமது ராணுவ வீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டால் அதற்கு பதிலாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.