
தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி சாலையின் தடுப்புச்சுவரில் மோதி பயங்கர தீ விபத்து – கோவில்பட்டி அருகே அதிகாலையில் பரபரப்பு
தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான டாரஸ் லாரி ஒன்று நள்ளிரவில் தூத்துக்குடியில் இருந்து சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பேப்பர் அட்டை கம்பெனிக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு கிளம்பி உள்ளது. அந்த லாரியை மஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்த டிரைவர் கற்பகராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் கிளீனர் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த முருகேசன் இருந்துள்ளார்.
லாரி இன்று அதிகாலையில் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த போது திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் அதிவேகமாக மோதியுள்ளது. இதில் லாரியின் முன்பக்க டயர் ஒன்று ஸ்டிரியங்வுடன் துண்டானது மட்டுமின்றி, மோதிய வேகத்தில் டீசல் டேங்க்கும் சேதமடைந்து தீ பற்றி எரிந்து மளமளவென லாரி பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் கற்பகராஜா மற்றும் கீளினர் முருகேசன் ஆகியோர் லாரியின் கண்ணாடியை உடைத்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்து கொண்டு இருப்பதை பார்த்த அருகில் இருந்த மக்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் லாரி முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்து மட்டுமின்றி, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலக்கரியும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.