
தூத்துக்குடியில் வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து, அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆதாம் அலி தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜாமணி மற்றும் போலீசார் நேற்று (06.03.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் உள்ள மொட்டைக் கோபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் மல்லையா (36), தூத்துக்குடி பூபல்ராயர்புரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் அந்தோணி கிங்ஸ்டன் (28) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் ராமதீபன் (27) என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே போலீசார் எதிரிகளான மல்லையா, அந்தோணி கிங்ஸ்டன் மற்றும் ராமதீபன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மல்லையா மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 7 வழக்குகளும், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 2 வழக்குகளும், கரூர் மாவட்டம் வெள்ளியனை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மத்திய சிவில் பிரிவில் ஒரு வழக்கும், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரன் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என 14 வழக்குகளும்,
அந்தோணி கிங்ஸ்டன் மீது ஏற்கனவே தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 6 வழக்குகளும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 9 வழக்குகளும், ராமதீபன் மீது ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ராமநாதபுரம் மாவட்டம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் என 9 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

