
கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தூத்துக்குடி கலெக்டர் மற்றும் எஸ்பி நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 31.03.2024 அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாயர்புரம் தேரிரோடு விலக்கு அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஸ்ரீவைகுண்டம் பேரூர் தெற்கு தெருவைச் சேர்ந்த செந்தில் பெருமாள் மகன் மருது (எ) மருதுபாண்டி (29) என்பவரை சாயர்புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மருது (எ) மருதுபாண்டி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஸ்டெல்லாபாய்யும்,
கடந்த 05.04.2024 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் ரோடு ஓடை பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முறப்பநாடு பக்கப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் அருண்குமார் (24) என்பவரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர்களின் மோகன்ராஜ் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி ஸ்ரீவைகுண்டம் பேரூர் தெற்கு தெருவைச் சேர்ந்த செந்தில் பெருமாள் மகன் 1) மருது (எ) மருதுபாண்டி மற்றும் முறப்பநாடு பக்கப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் 2) அருண்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.