தூத்துக்குடியில் பிரபல பிரியாணி ஹோட்டலில் பழைய சிக்கன், மட்டன் பறிமுதல் – உரிமம் தற்காலிக ரத்து – உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

தூத்துக்குடியில் பிரபல பிரியாணி ஹோட்டலில் பழைய சிக்கன், மட்டன் பறிமுதல் – உரிமம் தற்காலிக ரத்து – உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஹனிஃபா பிரியாணி கடையில் 38 கிலோ பழைய சிக்கன், சாதம், எண்ணெய் கத்திரிக்காய், பரோட்டா/சப்பாத்தி மாவு மற்றும் பிரட் ஹல்வா ஆகியவை பறிமுதல் செய்து அழித்து, அதன் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிக ரத்து செய்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, உணவு பாதுகாப்பு ஆணையர் (பொ) ஹரிஹரன்,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, ஆகியோரின் உத்திரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் தலைமையின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-2-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவானது தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டயபுரம் சாலையில் உள்ள அசைவ ஹோட்டலான ஹனிஃபா பிரியாணி என்ற கடையில் இன்று (15.05.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது, நேற்று சமைத்து, விற்பனையாகாமல் மீதமாகி, ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 2.3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், 1.6 கிலோ மீன் வகை, 3 கிலோ சோறு, 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், 2.7 கிலோ பிரட் ஹல்வா, 2.3 கிலோ நூடுல்ஸ், 15 கிலோ சப்பாத்தி மற்றும் பரோட்டா மாவு, தேதி குறிப்பிடப்படாமல் முன் தயாரிப்பு செய்து ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ சிக்கன், காலாவதி தேதி குறிப்பிடப்படாத 2 கிலோ அரசி மாவு, காலாவதியான 3 லிட்டர் சோயா சாஸ் ஆகியவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, அவை மாநகராட்சி குப்பைத்தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும், உணவகத்தின் சமையலறை தூய்மையற்றும், சிலந்தி வலைகளுடன் காணப்பட்டதுடன், தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கையும் இல்லை. பணியாளர்களுக்குத் தொற்றுநோய்த் தாக்கமற்றவர்கள் என்ற சான்றிதழும், இருப்பு பதிவேடுகளும் இல்லை. மேலும், சமையலறை நுழைவு வாயிலில் சிமெண்ட் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும், ரெஸ்டாரண்ட் வகைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல், ரெஸ்டாரண்ட் தொழில் நடத்திவருவதும் உறுதியானது. எனவே, “ஹனிஃபா பிரியாணி” என்ற பெயரில் ஃப்ரான்சைஸ் எடுத்து, லிவிங்ஸ்டா என்பவருக்குச் சொந்தமான மேற்படி ஹனிஃபா பிரியாணி என்ற கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய தீர்மானித்து, உத்திரவு வழங்கப்படவுள்ளது. எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை அதனை இயக்க இயலாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகின்றது.

ஹோட்டல்/ரெஸ்டாரண்ட் வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:

1. அனைத்து வகையான உணவு வணிகர்களும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில், தங்களது வணிகத்திற்குச் *சரியான வகையில்* உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.

2. சந்தேகத்திற்கிடமாக உள்ள மூல உணவுப் பொருட்களையோ, அனுமதியற்ற செயற்கை நிறமிகளை உபயோகிக்கக் கூடாது.

3. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.

4. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களின் விபரச்சீட்டில், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண் உள்ளிட்ட லேபிள் விபரங்கள் குறிப்பிட்டிருக்கின்றதா என்பதை ஆய்வு செய்து கொள்முதல் செய்ய வேண்டும்.

5. காலாவதியான உணவுப் பொருட்களை பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது.

6. உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காவண்ணதும், தூசிகள் விழாதவாறும் மூடி வைத்தும், கிருமி தொற்று ஏற்படாத சுகாதாரமான சூழலில் வைத்தும் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.

7. ⁠முதல் நாள் தயாரித்த உணவுப் பொருட்களில் மீதமானவற்றை, ஃப்ரிட்ஜில் வைத்து, அடுத்த நாள் நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடாது. மாறாக அதனை அப்புறப்படுத்தி, பதிவேட்டில் விபரங்கள் பராமரிக்க வேண்டும்.

8. முன்தயாரிப்பு செய்த அசைவ உணவுப் பொருட்கள் வைக்கப்பட்ட பாத்திரத்தில், முன்தயாரிப்பு செய்த நாள் மற்றும் நேரம் குறிப்பிட வேண்டும்.

9. உணவகங்களில் உள்ள பணியாளர்களுக்கு, தொற்றுநோய்த் தாக்கமற்றவர் என்பதற்கான ஆதாரம் வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தலைத்தொப்பி, கையுறை, ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும்.

10. அனைத்துப் பணியாளர்களும் டைஃபாய்டு தடுப்பூசி உள்ளிட்ட உணவின் மூலமாகப் பரவக்கூடிய நோய்களுக்கு எதிராக தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் கடுமையாக எச்சரிக்கப்படுகின்றது.

மேலும், நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )