
தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய 100 பவுன் தங்க நகை கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்
தூத்துக்குடி சின்னமணி நகரில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் தங்க நகை கொள்ளை போன சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சுகுமார் இவர் நாகப்பட்டினம் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சுகுமார் கடந்த 10ம் தேதி தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றுள்ளார். அவரது வீட்டில் தூத்துக்குடி சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த அமுதா என்ற பெண் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். அமுதா இன்று காலை வழக்கம்போல் வீட்டை சுத்தம் செய்வதற்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சுகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென்பாகம் காவல் நிலையத்தில் சுகுமார் புகார் அளித்தார். இதையடுத்து தென்பாகம் காவல்துறையினர் மற்றும் மோப்பநாய் தடையவியல் துறையினர் ஆகியோர் நேரில் சென்று கொள்ளை சம்பவம் குறித்து சோதனை நடத்தினர்.
இதையடுத்து, சென்னையில் இருந்து உடனடியாக தூத்துக்குடி திரும்பிய சுகுமார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த அறைகளை சோதனை செய்தபோது தங்க நகைகள் இருந்த அறையை கொள்ளையர்கள் உடைக்க முயன்றுள்ளனர். அதை உடைக்க முடியாமல் தோல்வியில் முடிந்ததால் பக்கத்து அறையில் இருந்த வெள்ளிப் பொருள்களை திருடி சென்றது தெரிய வந்துள்ளது.
மேலும், அறையில் வைத்திருந்த 100 பவுன் தங்க நகைகள் பத்திரமாக உள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் தெரிவித்துள்ளார்.