
தூத்துக்குடி: 15 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்முறை செய்த வழக்கில் புதுக்கோட்டை இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்ரஹிம் மகன் பசீர் (48) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடந்த 03.05.2024 அன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி பசீர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சாந்தகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குற்றவாளி பசீரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் குற்றவாளி பசீரை காவல் ஆய்வாளர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.