Breaking News
பெரா’ வழக்கில் சுதாகரனை ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சுதாகரனை ஆஜர்படுத்த வேண்டும் என, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரது அக்கா மகன்கள் சுதாகரன், பாஸ்கரன் மற்றும் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரன் ஆகியோர் மீது, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரணை நடக்கிறது. அந்த வழக்குகள், மாஜிஸ்திரேட் மலர்மதி முன், நேற்று விசாரணைக்கு வந்தன.

கண்டனம்:

அப்போது, அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் தொடர்ந்த, மத்திய அரசின் அமலாக்கத்துறை வழக்கறிஞரிடம், ”சுதாகரன் எங்கே,” என, மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பினார். அதற்கு, ”பெங்களூரு சிறையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி, அவரை ஆஜர்படுத்த முடியவில்லை,” என, அமலாக்கத்துறை வழக்கறிஞர் கூறினார். அதற்கு, கண்டனம் தெரிவித்த மாஜிஸ்திரேட், 19ம் தேதி, சுதாகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டார்.

என்ன ஆச்சு?

தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘தினகரன் ஏன் ஆஜராகவில்லை’ என, மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பினார். ‘வேறொரு வழக்கில் கைதாகி, டில்லி திகார் சிறையில் இருப்பதால், வர முடியவில்லை’ என, அவரது வழக்கறிஞர் கூறினார்.

அதற்கு மாஜிஸ்திரேட், ‘அந்த வழக்கு மற்றும் கைது தொடர்பாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டு இருந்தேன். என்ன ஆயிற்று’ என, கேள்வி எழுப்பினார். அதற்கு, தினகரனின் வழக்கறிஞர் தெரிவித்த பதிலை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட், இரு வாரங்களுக்குள் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

பாஸ்கரன் ஆஜர் :

பாஸ்கரன் மீதான வழக்கு, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்-1ல், மாஜிஸ்திரேட் ஜாகீர் உசேன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஸ்கரன் நேரில் ஆஜரானார். இந்த வழக்கில், அவரது வழக்கறிஞர், அரசு தரப்பு சாட்சியான பால சுப்பிரமணியன் என்பவரிடம், குறுக்கு விசாரணை செய்தார். இதையடுத்து, இந்த குறுக்கு விசாரணை, ஜூன், 7க்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.