Breaking News
பருவநிலை மாற்றம் உண்மையே: அதிபர் ட்ரம்ப் ஆலோசனைக் குழுவிலிருந்து இலான் மஸ்க் விலகல்

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் எடுத்த முடிவுக்கு பலதரப்புகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.

குறிப்பாக டிஸ்னி, ஜி.இ. மற்றும் கோல்ட்மான் சாக்ஸ் போன்ற மிகப்பெரிய வர்த்தகத் தலைமைகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் அதிபர் ட்ரம்ப்பின் ஆலோசனைக் குழுவிலிருந்த டெஸ்லா தலைவர் இலான் மஸ்க் ராஜினாமா செய்ததும் அங்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இலான் மஸ்க் சமூகவலைத்தளத்தில் கூறும்போது, “இந்தியா எலெக்ட்ரிக் கார்களை 2030-ல் விற்கவுள்ளதாகக் கூறியுள்ளது. அது ஏற்கெனவே சூரிய ஒளி மின்சக்திக்கு மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் விற்கப்படும் கார்கள் அனைத்தும் 2030-ல் எலெக்ட்ரிக் கார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான செய்தி ஆனால் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கு மோசமான செய்தி என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோல்ட்மான் சாக்ஸ் குழுமத்தின் லாய்ட் பிளாங்க்ஃபெய்ன், “அமெரிக்க முடிவு சுற்றுச்சூழலுக்கு ஒரு பின்னடைவு என்பதோடு உலகில் அமெரிக்க தலைமைத்துவத்திற்கும் பின்னடைவு” என்று கூறியுள்ளார்.

ஜி.இ.நிறுவனத்தின் ஜெஃப்ரி இம்லெட் “பருவநிலை மாற்றம் உண்மையே, தொழிற்துறை தற்போது அரசை நம்பியிருக்காமல் தாங்களே முன்னிலை வகிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஃபோர்ட் நிறுவனத்தின் சேர்மன் பில் ஃபோர்டு, “பருவநிலை மாற்றம் உண்மை என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றத்தைக் குறைப்பதில் கடமை உணர்வுடன் இருப்போம்” என்றார்.

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு நெராவின் ஆய்வு ஒன்றை ட்ரம்ப் காட்டியதும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது, நெரா ஆய்வின் படி, “பாரீஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா செயலாற்றினால் 2040-ம் ஆண்டு வாக்கில் 6.5 மில்லியன் தொழிற்துறை வேலைவாய்ப்புகள் பறிபோகும், ஜிடிபியில் 3 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும், என்று கூறப்பட்டுள்ளது. இந்த நெரா ஆய்வு பலதரப்பினராலும் நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.