நீதிபதிகளின் பெயரால் லஞ்சம் வாங்கியது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு சுப்ரீம் கோர்ட்டு கருத்து
வழக்குகளை முடித்து வைக்க நீதிபதிகள் லஞ்சம் வாங்குவதாக சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, லக்னோவில் செயல்பட்டு வந்த ஒரு மருத்துவக்கல்லூரி தொடர்பான வழக்கில் ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்தூசி லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அந்த அமர்வு முன் 13-ந்தேதி அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் எனக்கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நீதிபதிகள் பெயரால் லஞ்சம் வாங்கும் விவகாரம் தொடர்பாக ‘நீதித்துறை பொறுப்புடைமைக்கான பிரசாரம்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தி, வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. இதன் முக்கியத்துவத்தை யாரும் குறைக்க முடியாது. நீதி என்னும் தெளிந்த நீரோடையை யாரும் மாசுபடுத்தக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். யாராயிருந்தாலும், எவ்வளவு சக்தி படைத்தவராக இருந்தாலும் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது. நீதி வழங்கப்பட வேண்டும்’ என்று கடுமையாக தெரிவித்தனர்.
மேலும் இந்த விவகாரம் தங்கள் முன் விசாரணைக்கு வந்தது குறித்து வக்கீல் பிரசாந்த் பூஷணிடம் நீதிபதிகள் வருத்தம் வெளியிட்டனர். குறிப்பாக நீதிபதி சிக்ரி கூறுகையில், ‘இந்த விவகாரம் கடந்த 8-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, அது குறித்து விசாரிக்க சரியான அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் நேற்று (நேற்று முன்தினம்) 2-வது கோர்ட்டில் மீண்டும் வழக்கு பதிவு செய்ய என்ன தேவை வந்தது? இது குறித்து நீங்கள் என்னிடம் கூறியிருக்க முடியும். அப்போது என்னால் முடிந்தால் இதை தடுத்து இருப்பேன். உங்களுக்கே என்னைப்பற்றி தெரியும்’ என்று கூறினார்.
இந்த விவகாரம் குறித்து சரியாகவும், முழுமையாகவும் விசாரிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த பிரச்சினையில் சி.பி.ஐ. விசாரணையை தொடர அனுமதிப்பதா? அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அப்போது வக்கீல் பிரசாந்த் பூஷண், ‘இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது. அதில் நீங்களும் (நீதிபதி சிக்ரி) இருக்கலாம். எனவே இதில் வேறு என்ன கேட்க முடியும்?’ என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி சிக்ரி, ‘எனக்கு அதில் விருப்பம் இல்லை, நீங்கள் கூறினால் நான் அதில் இருந்து விலகிவிடலாம்’ என்று குறிப்பிட்டார். இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது.