
மோடி மட்டுமல்ல உங்க அப்பன் வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது -அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
திமுகவை மோடி மட்டுமல்ல உங்க அப்பன் வந்தாலும் அழிக்க முடியாது என சமுக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சர்க்கஸ் மைதானத்தில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பட்ஜெட் மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில்,
நேற்று பெய்த மழையில் பெய்த காளான் போல ஒரு சிலர் என்னவென்று தெரியாமல் பேசி வருகின்றனர். தமிழகம் மற்றும் திமுகவின் வரலாறு தெரியாமல் பேசி வருகின்றனர். வீடு இல்லாதவர்களைக் கண்டறிந்து , 8 லட்சம் பேர் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்களில் ஒரு லட்சம் பேருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கனவு இல்லம் மூலமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன. இந்த திட்டம் ஒன்றிய அரசின் திட்டம் என்று அண்ணாமலை கூறுகிறார். யாரோ பெத்த பிள்ளைக்கு பெயர் வைப்பது உங்கள் பழக்கம். கருணாநிதியின் கனவு இல்லம் திட்டம் என்பது தமிழக அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்றிய அரசு பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. வரலாறு திருத்தப்பட்ட வரலாற்றை மாற்றியமைக்கப்படுகிறது. மகாத்மா காந்தியை நாம் மகான் என்கிறோம் .ஆனால் அவர்கள் வேறு கதை சொல்கிறார்கள்.
பொய் சொல்லி ,பிரிவு ஏற்படுத்தி, நம்மை ஏமாற்ற நினைக்கின்றனர். தமிழக மக்களிடம் உங்கள் (பாஜக) பருப்பு வேகாது. இங்குள்ள மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள் எல்லோருக்கும் எல்லாம் தெரியும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். ஊட்டச்சத்து உறுதிப்படுத்தல் என்ற திட்டம் முழுக்க முழுக்க தமிழக அரசு நிதி. அதுவும் ஒன்றிய அரசு நிதி என்று கூறுகிறார் அண்ணாமலை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நல்லா வடை சுடுகிறார். உங்கள் பொய்களை மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை.
நிச்சயமாக இந்த முறை தமிழக மற்றும் புதுவையில் 40க்கு 40 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவோம். இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். அதிமுக பிஜேபிக்கு அடிமை ஆட்சி நடத்தியது. பிரதமர் மோடிக்கு நல்லா சலாம் போட்டனர். என்ன செய்தாலும் உள்ளேன் ஐயா என்று கூறி தலையாட்டி கொண்டிருந்தனர். ஜெயலலிதா இருந்தபோது வர முடியாத ஒன்றிய அரசு திட்டங்கள் அவர் மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டன.
இன்றைக்கு அதிமுக பசுந்தோள் போர்த்திய புலி போல ஒன்னும் போல பசப்பு வார்த்தைகளை பேசி வருகிறார்கள். நமது உரிமைகளை அடகு வைத்து தமிழர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு கையெழுத்து போட்ட கட்சி அதிமுக. அதிமுகவிற்கு சரியான பாடம்
கற்றுத் தருவார்கள்.
மீண்டும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்பி போட்டியிட தமிழக முதல்வர் வாய்ப்பு தருவார் என்று நம்புகிறோம். எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்.
“திமுகவை மோடி மட்டுமல்ல உங்க அப்பன் வந்தாலும் அழிக்க முடியாது”. மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது திமுக. 6 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ஒன்றிய அரசு.
எந்த முகத்தை வைத்துக்கொண்டு மோடியும் , அண்ணாமலையும்
பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. கல்வி கடன் ,விவசாய கடன், மகளிர் கடன் ஆகியவற்றை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்யவில்லை. தமிழக அரசு கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்தது.
தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக பெரும் ஊழல் செய்துள்ளது. 90 சதவீத நிறுவனங்கள் பாஜகவிற்கு தேர்தல் நிதி கொடுத்துள்ளது. தடுப்பு ஊசி தயாரித்த ஜூரம் நிறுவனம் மட்டும் 300 கோடி ரூபாய் பாஜகவிற்கு நிதி அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள், ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
நாட்டையே விற்று திங்கக்கூடிய ஒரு கூட்டம் ஆட்சி நடத்தி வருகிறது. அந்தக் கூட்டம் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது . இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகம் வெற்றி பெற இந்திய கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றார்.
கோவில்பட்டி செய்தியாளர்: முத்துக்குமார்