
தூத்துக்குடியில் பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுகவினர்- சர்ச்சையில் சிக்கிய சண்முகநாதன்
தூத்துக்குடியில், ரமலான் பெருநாளை முன்னிட்டு தொழுகை முடிந்து வந்த இஸ்லாமிய சகோதரர்களிடம் அதிமுகவினர் பணம் கொடுத்து வாக்கு சேகரித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்ச்சைக்குரிய வீடியோ
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள ஈக்தா தோட்டத்தில் வைத்து முஸ்லிம்கள் பங்கேற்ற தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தனது கட்சிகாரர்களுடன் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தனர்.
இதற்கு போட்டியாக திமுகவினரும் துண்டு பிரசுரங்கள் வழங்கி கனிமொழிக்கு ஆதரவாக உதயசூரியனில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தனர். இரு கட்சியினரும், தங்கள் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்று மாறி, மாறி கோஷங்கள் எழுப்பியும், வாக்குறுதிகள் பல வழங்கியும் வாக்கு சேகரித்தனர்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்பி. சண்முகநாதன் இருந்தவர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை சேகரித்தார்.
அருகில் இருந்து கண்காணித்து கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளோ இதைக்கண்டும் காணாததுபோல் இருந்தனர். தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளிவரும் நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தனிக்கவனம் செலுத்தி தீர்வு காணப்படுமா.?.
சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எதிர்பார்ப்பு.!.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது பறக்கும் படையினர் தங்களின் அலட்சியத்தால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.