Breaking News
ஜல்லிக்கட்டு: 13ம் தேதி மதுரையில் 3 அதிமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்க சட்டப்பூர்வ நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கக்கோரி அதிமுக கூட்டணி கட்சிகளான மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை வரும் 13ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது,

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாம் ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்க சட்டப்பூர்வ நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கக்கோரி எதிர்வரும் 13-1-2017 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரையில் மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக கொங்கு இளைஞர் பேரவை ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கின்றன.

இதை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ., தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு எம்.எல்.ஏ. ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதில் சாதி, மத, கட்சி சார்பற்று அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.