Breaking News
மார்ச் 30 முதல் லாரி ஸ்டிரைக் : பொருட்கள் விலை உயர வாய்ப்பு

சுங்க சாவடி வரி வசூலை எதிர்த்து மார்ச், 30 ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடக்க உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த, நான்கு லட்சம் லாரிகள் பங்கேற்கும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்தியா முழுவதும், 363 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில், 41 சுங்க சாவடிகள் உட்பட தென் மாநிலங்களில், 117 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில், 26 சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் வரி வசூல் செய்து வருகின்றனர்; இதை கண்டிக்கிறோம். தமிழக அரசு டீசல் மீது வாட் வரியை உயர்த்தி உள்ளதால் இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 40 ஆயிரம் லாரிகள் தமிழகத்தில் டீசல் பிடிக்காமல் வெளிமாநிலங்களுக்கு சென்று டீசல் பிடிக்கின்றன. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, உயர்த்தப்பட்ட காப்பீடு கட்டணம், வாகன பதிவு கட்டணம், 15 ஆண்டு ஆயுள் கடந்த லாரிகளை அழித்தல், டீசல் மீது வாட் வரி ஆகியவற்றை வாபஸ் பெற கேட்டு வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளோம். தென் மாநிலங்களில் 9.50 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.600 கோடி முதல் ரூ.800 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும். இது நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில், 1.5 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லாரிகள் ஸ்டிரைக் காரணமாக காய்கறிகள், காஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.