Breaking News
புஜாரா சாதனை 202, சஹா 117, ஜடேஜா 54* – இந்தியா 152 ரன்கள் முன்னிலை பெற்று டிக்ளேர்

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் புஜாரா இரட்டைச் சதம் எடுக்க, சஹா அருமையான சதத்தை எடுக்க, ஜடேஜாவின் அதிரடி அரைசதத்துடன் இந்தியா 4-ம் நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா வார்னர், இரவுக்காவலன் லயன் விக்கெட்டுகளை 23 ரன்களுக்கு இழந்து கடும் சிக்கலில் உள்ளது.

4-ம் நாளான இன்று இந்திய அணி 360/6 என்று தொடங்கியது, இதில் புஜாரா 130 ரன்களுடனும் சஹா 18 ரன்களுடனும் களமிறங்கினர். கடைசியில் புஜாரா 525 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 202 ரன்கள் எடுத்து லயன் பந்தில் மேக்ஸ்வெலிடம் ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விருத்திமான் சஹா 233 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஓகீஃப் பந்தில் மேக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

புஜாராவும், சஹாவும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 229 ரன்களைச் சேர்த்தனர். இதில் சஹாவின் ஸ்ட்ரைக் ரேட் டெஸ்ட் இன்னிங்ஸுக்கான சரிவிகிதத்தில் இருந்தது, அதாவது 50.21% இது சஹாவின் ஒரு மிக முக்கியமான, அருமையான சதம் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.ஆனால் புஜாரா சாதனையான 525 பந்துகள் நின்றார். 38.47% தான் ஸ்ட்ரைக் ரேட். இரட்டைச் சதத்துக்கு நிச்சயம் கூடுதலாக 50-60 பந்துகளை அவர் எடுத்துக் கொண்டுள்ளார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா இறங்கி 55 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 54 எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். 603 ரன்களுக்கு இந்தியா 210 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. ஓவருக்கு 2.87 ரன்கள்தான், ஆனால் மிக முக்கியமான, தொடரை முடிவு செய்யும் 152 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா தரப்பில் கமின்ஸ் மிகவும் உழைத்து வீசி 106 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார். ஓகீஃப் 77 ஓவர்களில் 199 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள், சிக்கனமாக வீசினார். நேதன் லயன் 46 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 163 ரன்களுக்கு 1 விக்கெட்.

புஜாராவின் சாதனை:

இந்திய வீரர்களிலேயே ஒரு இன்னிங்ஸில் அதிகபந்துகளைச் சந்தித்தவர் என்ற பெருமையை எட்டினார் புஜாரா, அவர் இந்த இன்னிங்ஸில் மொத்தம் 525 பந்துகளை சந்தித்தார். இதுதான் ஒரு இந்திய வீரர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகபட்ச பந்துகளைச் சந்தித்தத நிகழ்வாகும்.

இவருக்கு அடுத்த படியாக ராகுல் திராவிட் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் 270 ரன்களை எடுத்த போது 495 பந்துகளை சந்தித்திருந்தர், இது தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. 491 பந்துகளை எதிர்கொண்டு நவ்ஜோத் சித்து (201) 3-ம் இடத்திலும் 477 பந்துகளை எதிர்கொண்டு ரவிசாஸ்திரி (206) 4-ம் இடத்திலும் 472 பந்துகளை எதிர்கொண்டு சுனில் கவாஸ்கர் (172) 5-ம் இடத்திலும் உள்ளனர்.

152 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்ஸை ஆடியது. வார்னர் விக்கெட்டை ஜடேஜா பவுல்டு முறையில் வீழ்த்தினார், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி பெரிய அளவில் திரும்பிய பந்து வார்னர் தடுப்பைக் கடந்து ஆஃப் ஸ்டம்ப்பை பெயர்த்தது. இரவுக்காவலனாக நேதன் லயன் இறங்கினார். அவர் 2 ரன்கள் எடுத்து ஜடேஜா ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்து ஒன்று திரும்ப, மட்டையைக் கடந்து சென்ற பந்து ஸ்டம்பைத் தாக்கியது.

முன்னதாக…

டி.ஆர்.எஸ். உதவியினால் தப்பி ஆஸி. பந்து வீச்சை வறுத்தெடுத்த புஜாரா, சஹா!

ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் புஜாரா, சஹாவின் ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு தோல்வி பயத்தை உருவாக்கியுள்ளது.

இருவரும் அபாரமாக ஆடி 7-வது விக்கெட்டுக்காக 229 ரன்களைச் சேர்த்துள்ளனர். தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 152 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று சஹா, புஜாரா இருவரும் டி.ஆர்.எஸ். உதவியினால் அவுட் தீர்ப்பிலிருந்து தப்பினர்.

முதலில் ஒருமுறை 140-வது ஓவரில் ஹேசில்வுட் பவுன்சர் வீச புஜாரா ஹூக் செய்தார், பந்து டாப் எட்ஜ் எடுக்காமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது, ஆஸி.அணியினர் பலவீனமான முறையீடு எழுப்பியதற்கே நடுவர் கஃபானே கையை அடக்க முடியாமல் உயர்த்தி பிறகு அவுட் இல்லை என்று மாற்றிக் கொண்டார்.

இன்று 2வது ஓவரில் சஹாவுக்கு எல்.பி. அவுட் தீர்ப்பளிக்கப்பட்டது. சஹா எப்படியோ இதனை ரிவியூ செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். ரிவியூவில் பந்து லெக்ஸ்டம்பை விட்டு விலகிச்செல்வது தெரியவந்தது, அவுட் நாட் அவுட் ஆனது.

இன்னிங்சின் 155-வது ஓவரில் அதே போல் லயன் பந்தில் புஜாரா எல்.பி.என நடுவர் இயன் கோல்டு தீர்மானித்து அவுட் என்றார், இதை புஜாரா ரிவியூ செய்ய நாட் அவுட் என்று தீர்ப்பு மாற்றப்பட்டது.

இவையெல்லாம் அவுட் என்று தீர்ப்பாகியிருந்தால் இந்தியா தற்போது எட்டியுள்ள வலுவான நிலையை அடைந்திருப்பது சந்தேகமே. முதல் டெஸ்ட் போட்டியில் தப்பும் தவறுமாக டி.ஆர்.எஸ்-ஐ பயன்படுத்திய பிறகு இந்த டெஸ்ட் போட்டியில் டி.ஆர்.எஸ்.ஐ இந்திய அணியினர் சாமர்த்தியமாக பயன்படுத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.