Breaking News
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா

கொசுக்கள் வளர்த்தால், அபராதம், சிறை தண்டனை விதிக்கும் வகையிலான மசோதாவுக்கு, ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆந்திரவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை, அதிநவீன கட்டமைப்புடன் அம்மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது.

புதிய நடவடிக்கை :

இந்நிலையில், கொசுக்கள் குறித்து ஆய்வு நடத்திய, அம்மாநில அதிகாரிகள் குழு, அவற்றை ஒழிக்க புதிய நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியாவதற்கு, சுற்றுப்புற சீர்கேடு மற்றும் மக்களின் அலட்சிய போக்கும் காரணமாக அமைகிறது. அதனால் வீடுகள், கடைகள், உணவகங்கள், நெடுஞ்சாலையில் உள்ள தள்ளுவண்டிகள் இவற்றின் அருகில் கொசு உற்பத்தியாகும் விதமாக, கழிவுநீர், குப்பை கூளங்கள் உள்ளிட்டவை தேங்கும்படி செய்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதற்கும் மேலும் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியானால், தினசரி, 100 ரூபாய் அப்பகுதி மக்களிடம் அபராதமாக வசூலிக்கப்படும். காலி மனைகள், கட்டுமானம் நடந்து வரும் பகுதிகள், உணவகங்கள், விடுதிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள் அருகே, கொசு உற்பத்தியாகும் வகையில், சுற்றுச்சூழல் இருந்தால், சம்பந்தப்பட்டோருக்கு, முதலில் அபராதம் விதிக்கப்படும்.

விஷ காய்ச்சல் :

அதற்கு பின்னும், அதேநிலை தொடர்ந்தால், ஒரு மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும். இது தொடர்பான புதிய மசோதாவுக்கு, ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில், இது தொடர்பான மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட விஷ காய்ச்சல் முற்றிலும் பரவாமல் தடுக்க முடியும் என, ஆந்திர அரசு கருதுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.