Breaking News
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிவித்தார். அப்போது, செல்லாத ரூபாய் நோட்டுகளை, 2017, மார்ச் 31 வரை, வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

ஆனால், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மட்டுமே, செல்லாத ரூபாய் நோட்டுகளை, மார்ச் 31 வரை, வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என, பின், அறிவிக்கப்பட்டது. செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆர்.டி.ஐ., கீழ், ரிசர்வ் வங்கிக்கு, சமூக ஆர்வலர் ஒருவர் அனுப்பிய கேள்வியில், ‘மார்ச் 31 வரை, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என, பிரதமர் முதலில் அறிவித்தார். இதன்பின், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே, மாற்றிக் கொள்ளலாம் என மாற்றப்பட்டது ஏன்’ என, கேட்கப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு பதில் அளிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. ‘செல்லாத ரூபாய் நோட்டு குறித்த தகவல்களை வெளியிட்டால், நாட்டின் பொருளாதார நலனுக்கு விரோதமாக அமைந்துவிடும்; அதனால், தகவல்களை வெளியிட முடியாது’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.