Breaking News
மதுபான விற்பனை சட்ட விரோதமல்ல; பின் ஏன் இந்தத் தடை உத்தரவு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கேள்வி

மதுபானக் கடைகள் இல்லாத 500மீ பரப்பு குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலும் அகற்றி விடுமா என்று உச்ச நீதிமன்றத்தின் தேசிய, மாநில நெடுஞ்சாலை மதுபான விற்பனை தடை உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.

உச்ச நீதிமன்ற தடை உத்தரவினால் ‘பலதரப்பு பிரச்சினைகள்’ தோன்றுவதாக டெல்லி வழக்கறிஞர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் கட்டுரை எழுதினார், இதன் தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் வாதிடும் போது பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் நடைமுறை ரீதியான விவகாரங்கள் எழுந்துள்ளது என்றும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

பொதுச்சுகாதாரம், உயிருக்கான பாதுகாப்பு குறித்த உச்ச நீதிமன்றத்தின் மையமான கவலையினால் தடை உத்தரவு பிறந்தது.

வழக்கறிஞர்கள், ‘ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தும்’ என்ற வகையிலான நீதிமன்றத்தின் அணுகுமுறை நல்லதை விட அதிக தீங்கையே விளைவிக்கும் என்ற வாதிட்டனர், ஆனால் தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் சந்திராசூட். எல்.நாகேஸ்வர ராவ் இந்த எச்சரிக்கையை நிராகரித்தனர்.

மாறுபட்ட நில அமைப்பியல்

மாநிலங்களை கில்லட்டினுக்குள் செலுத்தக் கூடாது என்று வாதாடிய வழக்கறிஞர்கள், ஒவ்வொரு மாநிலத்தின் பல்வேறு தரப்பட்ட நில அமைப்புமுறைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

2 நாட்கள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற மாரத்தான் விசாரணைகளின் போது இந்தத் தடை உத்தரவு குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க விரயமான நடவடிக்கையே என்பதை வலியுறுத்திப் பார்த்தனர்.

வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறும்போது, “வீட்டை விட்டு கிளம்பும் முன்பே ஒருவர் நன்றாக மது அருந்தி விட்டு கிளம்ப முடியுமே” என்றார்.

தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்த அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடும் போது, “90% மதுபான விற்பனை நிலையங்கள் நகர எல்லைகளுக்குள்தான் இருக்கிறதே தவிர நகர எல்லைகளுக்கு வெளியே இல்லை. என் மாநிலத்தில் ஒவ்வொரு சிறிய ஊரையும், மாவட்ட தலைநகரங்களையும் மாநில நெடுஞ்சாலைகள் கடக்கின்றன. நகரங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. நகரமயமாதலின் துரிதகதி வளர்ச்சியினால் சிறிய சாலைகளில் இருபுறமும் கடைகள் என்றவாறே மாநில நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன.

500 மீ மதுவில்லாத பிரதேச என்பது எப்படி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க முடியும், கிடைக்கக் கூடிய இடத்துக்கு வண்டியில் சென்று மது அருந்த முடியாதா? மதுபான விற்பனை சட்ட விரோதமல்ல, பிறகு ஏன் இந்தத் தடை? மாநிலங்கள் இதனை ஆதரிக்கின்றன, மக்கள் ஆதரிக்கிறார்கள்” என்றார்.

மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதிடும் போது, “இதில் வரும் வருவாயைக் கொண்டு மாநிலங்களில் கல்வி வசதியை மேம்படுத்த முடியும். பெரிய அளவிலான விஷயத்தைப் பாருங்கள், இது ஏதோ சாலை விபத்துகள் பற்றியது மட்டுமல்ல” என்றார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவண், ‘இந்தத் தடை உத்தரவு அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது’ என்றார்.

மத்திய அரசின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றால் இது தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மட்டும்தான் பொருந்தும். ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து மாநில நெடுஞ்சாலைகளை நீங்கள் எப்படி சேர்க்கலாம்? என்று தவண் கேள்வி எழுப்பினார்.

இந்த வாதங்களை கவனமுடன் பரிசீலித்த அமர்வு, மதுபான விற்பனை நிலைய உரிமங்களுக்கான ‘திரும்பப் பெற முடியாத வகையிலான உரிமை’ மாநிலங்களுக்கு இல்லை. மதுபான உரிமங்களுக்கு யாரும் உரிமை கோர முடியாது

மேலும், கொள்கை அளவில், குடித்து விட்டு தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டக்கூடாது ஆனால் குடித்து விட்டு மாநில நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டலாம் என்பதை ஏற்க முடியாது என்று அமர்வு பதில் அளித்தது.

மேலும் தலைமை நீதிபதி கேஹர் கூறும்போது, 8 மாநிலங்கள்தான் தடை உத்தரவை எதிர்த்து மனு செய்துள்ளன, பிற மாநிலங்கள் இந்தத் தீர்ப்பின் பக்கம் உள்ளது, என்றார் திட்டவட்டமாக.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.