தினகரனுடன் சென்னை புறப்பட்டது டில்லி போலீஸ்
![தினகரனுடன் சென்னை புறப்பட்டது டில்லி போலீஸ்](https://worldpublicnews.com/wp-content/uploads/2017/04/dinakaran_3144897f-1.jpg)
தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தினகரன். இவரை விசாரணைக்காக டில்லி போலீசார் இன்று (ஏப்ரல் 27) சென்னை அழைத்து வருகின்றனர்.
சென்னை விரையும் டில்லி போலீஸ் :
இரட்டை இலை சின்னத்தை பெருவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் நேற்று முன்தினம் இரவு தினகரன் கைது செய்யப்பட்டார். இவர் நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தினகரன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தினகரனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டில்லி போலீசாரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் தினகரின் ஜாமின் மனுவை நிராகரித்து நீதிபதி, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் தினகரனை அழைத்துக் கொண்டு டில்லி போலீசார் சென்னை புறப்பட்டனர். தினகரனுடன் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்.