Breaking News
உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 11 நகரங்களில் வெயில் சதமடித்து இருந்தது. அதே வேளையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொருத்த வரை, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கூறிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை நிலவும். நேற்று மாலை எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, வேலூரில் 108.14, திருத்தணியில் 107.24, சென்னையில் 99.32 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.